Friday, November 22, 2013

பழங்களுடைய நற்குணங்கள்










இயற்கை அன்னை தமது குழந்தைகளுக்காகப் படைத்தளித்துள்ள பல்வேறு பழங்களுடைய நற்குணங்களை இப்பொழுது தெரிந்துகொள்ளலாமா?


அத்திப்பழம்:
அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வல்லது. இதில் உள்ள தாதுப்பொருளான பொட்டாசியமே அதற்குக் காரணம். இன்று உலகில் அதிக மக்கள் ஆர்வமாக உண்ணும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றில் அடங்கியுள்ள சோடியமானது உயர் இரத்த அழுத்தத்தைத் தூண்டக்கூடியது. பொதுவாக அனைத்துப் பழங்களிலும் சோடியத்தை விடப் பொட்டாசியம் அதிகம் காணப்படும். குறிப்பாக அத்திப்பழத்தில் பொட்டாசியம் நிறைய உள்ளது. எனவே தினமும் அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.


உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அத்தி ஒரு வரப்பிரசாதமே! இது நார்ச்சத்து நிரம்பிய பழம். எனவே, இது உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கவல்லது.

அதிக அளவு கால்சியமும், இரும்புச்சத்தும், மாங்கனீசும்கூட இந்தப்பழத்தில் காணப்படுகின்றன. இரும்புச்சத்து, இரத்த சோகை நோயைத் தடுக்கக்கூடியது. வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்வைக் கட்டுப்படுத்த வல்லது கால்சியம். இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.

மேலும், மாதவிலக்கு நின்றுபோன பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் மிகுந்துள்ளதால் இது மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.

இத்தனை பலன்களைக் கொடுக்கும் அத்திப்பழம், சற்று விலை அதிகமானதுதான். அதனால் என்ன? தினமும் இரண்டு உலர் அத்திப்பழங்கள் சாப்பிடுவது, ஒரு மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதற்கு ஒப்பானதாயிற்றே!


கொய்யா
ஆசியநாடுகளில், குறிப்பாக இந்தியாவில் அதிகம் விளையும் பழம் கொய்யா. இளமஞ்சள் அல்லது பச்சையான தோல்பகுதியையும், சிவப்பு அல்லது வெள்ளை நிற சதைப்பகுதியையும் உடையது இது. மலிவான பழமான இதனைப் பலரும் அலட்சியம் செய்வதுண்டு. ஆனால், இதைப் படித்தவுடன் கொய்யா மீதான உங்கள் மதிப்பு சரசரவென உயரும்.

கொய்யாப்பழம் அதிக நார்ச்சத்து உடைய பழம். இது உங்கள் சீரண சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தைத் தக்க வைக்கிறது. அதே சமயம், மலச்சிக்கல் ஏற்படாமல் காப்பாற்றுகிறது. உங்கள் சீரண உறுப்புகள் சரியாக வேலை செய்தாலே உடலில் பல நோய்கள் அண்டாதல்லவா? அதற்குக் கொய்யா மிகவும் உதவி செய்கிறது.

முற்றாத கொய்யாக்காய் அல்லது கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட வடிநீர் (Decoction) இருமல் மற்றும் சளியைக் கட்டுப்படுத்தக்கூடியது. கொய்யா, 'விட்டமின் சி' மற்றும் இரும்புச்சத்து நிரம்பியது. இவை இரண்டுமே, சளி மற்றும் விஷக்காய்ச்சலை எதிர்க்கக் கூடியவை.

கொய்யாவில் காணப்படும் ஆஸ்ட்ரின்ஜென்ட்கள் (ஒருவிதக் கூட்டு வேதிப்பொருள்) தளர்ந்த தசைகளை இறுக்கக்கூடியது. எனவே வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினைக் கட்டுக்குள் வைக்கவல்லது. மேலும் இந்த வேதிப்பொருள் நோய்த்தொற்றுகளை நீக்கவும் பயன்படுகிறது. கொய்யாவில் உள்ள இரும்புச்சத்து, விட்டமின் சி, கரோடினாய்டுகள் இவை அனைத்துமே சீரண உறுப்புகள் சரிவரப் பணி செய்யவும், இவற்றில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் நீங்கவும் உதவுகின்றன.

கொய்யாவில் உள்ள ஆஸ்ட்ரின்ஜென்ட்கள் (ஒருவிதக் கூட்டு வேதிப்பொருள்), அழகு சாதனப்பொருட்களிலும் பயன்படுத்தப் படுகின்றன. தசைகளை இறுக்க இந்த வேதிப்பொருள் உதவுவதால், உடல் அழகு பெறுகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குகின்றன. இதற்குக் கொய்யாவை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப் பட்ட வடிநீரைக்கொண்டு முகம் கழுவி வந்தாலும், முகத்தசைகளில் தளர்வு நீங்கி இறுகுவதை உணர முடியும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் கொய்யாவால் முடியும். அது மட்டுமல்ல. இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகாமலும், இரத்த ஓட்டம் சீராக இருக்குமாறும் கொய்யா செயல்புரிகிறது.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடைக்குறைப்பு செய்யவும், ஒல்லியாக இருப்பவர்கள் எடையை அதிகரிக்கவும் கொய்யா உதவும் என்றால் அதிசமல்லவா? அதிக நார்ச்சத்து எடைக்குறைப்பில் உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள பலவிதமான சத்துக்களோ, எடை குறைவாக உள்ளவர்களுக்கு எடை கூடவும் உதவுகிறது.

விட்டமின் சி ஏராளமாகக் காணப்படுவதால், இக்கனியானது 'ஸ்கர்வி' நோயைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. இவை தவிர புற்றுநோய், பல்வலி இவற்றிற்கும் மருந்தாகச் செயல்படக்கூடியது கொய்யா.

துரியன் பழம்: தென்கிழக்கு ஆசியாவில் மிகுந்த அளவில் விளையும் பழம் துரியன் பழம். மூக்கினைத் துளைக்கும் ஒரு விதமான மணம் (துர்நாற்றம்???) உடையது இப்பழம் என்பதால் இதை முகர்ந்து பார்ப்பவர்கள் முதலில் முகம் சுளிக்கலாம். ஆனால், இதை உண்பவர்கள் இதற்கு அடிமையாவார்கள். இப்பழத்தை உண்பதால் உண்டாகும் பயன்களோ ஏராளம், ஏராளம்.

துரியன்பழத்தில் அதிக அளவு விட்டமின் பி, சி மற்றும் இ அடங்கியுள்ளது. இப்பழத்தை உண்பவர்கள் தமது உடல் நலக்குறைபாடுகளில் இருந்து உடனடியாக விடுபடுவது உறுதி. இதன் இலைகளையும், வேர்களையும் பயன்படுத்தி காய்ச்சலுக்கும் மஞ்சள் காமாலைக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இப்பழம் இரத்தத்தைச் சுத்திகரிக்க வல்லது. இதில் உள்ள மென்புரதச்சத்தானது, தசைகளை வலுப்படுத்தக் கூடியது. துரியன் பழத்தில் உள்ள 'டிரைப்டோபான்' என்ற அமினோ அமிலம் பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை இவற்றைக்குறைக்கவும், மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய 'செரோடினின்' என்ற மூளையில் உள்ள ஹார்மோனைத் தூண்டவும் பயன்படுகிறது. இப்பழம் உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை மட்டுப்படுத்துகிறது.

துரியன் பழத்தையும் இலைகளையும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் வடிநீர் வீக்கங்களையும், சரும வியாதிகளையும் கட்டுப்படுத்தக் கூடியது.



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்










==--==

Please Contact for Appointment