Thursday, December 4, 2014

காதலி ரசகுல்லா... மனைவி டிராகுலா! - அவன் அவள் unlimited - Kumgumam Magazine






காதலி ரசகுல்லா... மனைவி  டிராகுலா!

மாடர்னா இருக்குற இந்தப் பொண்ணை மேக்கப் இல்லாம, நைட்டி கோலமா, தூங்கி எழுந்த மூஞ்சியோட பல்லு வௌக்குற மாதிரி கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க பாஸ்...நல்லா இல்லல்ல?இப்படிப்பட்ட பொண்ணுங்களுக்காக நாம அடிச்சிக்கலாமா பாஸ்?’’

- ‘ராஜா ராணி’ படத்தில் இளைஞர்களுக்கு தரப்பட்ட செம டிப்ஸ் இது. ‘‘காதலிக்கும்போது ஆண் - பெண் இருவரையும் உக்கிரப் பார்வை பார்க்கும் ரொமான்ஸ், போகப் போக ஏழாம் வீட்டுக்கும் எதிர்வீட்டுக்கும் தாவி விடுவதற்கு இதுதான் அடிப்படை’’ என்கிறார்கள் உளவியலாளர்கள். 

ஆண்களுக்கு மட்டுமல்ல... ‘காதலிக்கும்போது இளைய தளபதி விஜய் மாதிரி இருந்தவர், இப்போ தலைவாசல் விஜய் மாதிரி ஆகிட்டார்’ என்கிற மனக்குறை பெண்களுக்கும் உண்டு! பொதுவாக திருமணமாகி 7வது ஆண்டி லிருந்து இப்படியொரு அதிருப்தி இருவருக்குமே வரும் என்கிறார்கள். எனவேதான், இதற்கு ‘செவன் இயர் இட்ச்’ எனப் பெயர் வைத்திருக்கிறது உளவியல் உலகம். 

ரைட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லாரி கர்டெக் என்பவர், உலகம் முழுவதுமுள்ள தம்பதிகளின் திருமண அயர்ச்சி களை ஆராய்ந்தவர். ‘‘மணமான நான்காம் ஆண்டில் ஒருமுறையும் ஏழாம் ஆண்டில் ஒரு முறையும் கடுமையான மனக்கசப்பை எல்லா தம்பதிகளும் சந்திப்பார்கள்’’ என உறுதியாக வரையறுத்திருக்கிறார் இவர். பெரும்பாலானவர்கள் விவாகரத்து வரை போவது இந்தத் தருணங்களில்தான். 

ஜெர்மனியைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியான கேப்ரியல் பவுலி, ‘‘திருமண உறவு என்பதே ஏழாண்டுகளில் முடிந்து விடுவதாக சட்டத்தை மாற்ற வேண்டும். அதன் பின்பு தேவைப்பட்டால் தம்பதிகள் அதை ரினிவல் செய்யலாம்’’ எனச் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அளவுக்கு மேற்குலகில் இந்த ‘ஏழாம் ஆண்டு’ ரொம்ப சீரியஸ் மேட்டர்.நம் ஊரைப் பொறுத்தவரை சமூகக் கட்டுப்பாடுகளும் பண்பாடு சார்ந்த பிரஷர்களும் இந்தக் கட்டத்தைப் பிரிவின்றிக் கடக்க உதவுகின்றன.

ஆனால், ‘நான்காம், ஏழாம் ஆண்டுகளில் பெரியதொரு சச்சரவு வந்ததா?’ என இங்கே கேட்டுப் பாருங்களேன்... சின்னதொரு யோசனைக்குப் பிறகு, எல்லோருமே பலமாகத் தலையாட்டுவார்கள். காரணம், இங்கே ஆண்டுக்கணக்கெல்லாம் இல்லை. நித்தம் நித்தம் சண்டைதான், சமாதானம்தான், மக்கள்தொகை பெருக்கம்தான்!

‘‘இப்படிப்பட்ட மனவிலகலுக்கு மிக முக்கியமான காரணம், செக்ஸ் மீதான ஆர்வமும் கவனமும் காலப் போக்கில் குறைவது. குடும்பச் சுமை, வேலைப்பளு, குழந்தைகள், உடல் தோற்றம் மாறுவது எனப் பல்வேறு காரணங்களால் இந்த ஆர்வம் குறையலாம்!’’ என்கிறார் உளவியல் நிபுணரான டாக்டர் செந்தில்குமார். இந்த அயர்ச்சிக்குத் துவக்கப் புள்ளியாக இருக்கும் கல்யாண ஏமாற்றங்களையும் அவரே விளக்குகிறார்...

‘‘சமீபத்தில் என்னிடம் வந்த ஒரு கேஸ் ஹிஸ்டரி இது... 7 வருட டீசன்ட் லவ்... அதற்குப் பின் கல்யாணம். அடுத்த மாதமே அந்தப் பையன் டைவர்ஸ் கேட்டு வந்து நிற்கிறான். அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, ‘முத்தமிடும்போது அவள் வாயிலிருந்து கெட்ட வாடை வருகிறது... அது என் மூடை பாதிக்கிறது’ என்கிறான். இரண்டாவது, அவள் மார்பகங்கள் அவன் எதிர்பார்த்தது போல இல்லையாம். 

காதல் சமயத்தில் அவள் பயன்படுத்திய பர்ஃப்யூமையும் பேடட் ப்ராவையும் பார்த்து தான் ஏமாந்துவிட்டதாகச் சொல்கிறான் அவன். அவளோ, ‘நான் ஏமாத்தலை. இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நினைக்கலை’ என அழுகிறாள். 

இது ஏதோ ஃபாரீனில் நடந்ததல்ல... நம் சென்னையில் இப்படிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்தை நாடுகிறவர்கள் இப்போது எக்கச்சக்கம். காதலிக்கும்போது ஆணும் சரி, பெண்ணும் சரி, தங்களின் குறைகளை மறைத்து நிறைகளை மட்டுமே வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். கல்யாணத்துக்குப் பிறகு, ஒருவருக்கொருவர் உண்மை முகத்தை தரிசிக்கும்போது பெருத்த ஏமாற்றத்தை சந்திக்கிறார்கள். 

‘இதென்ன சார் அநியாயம்? ஒரு பொண்ணோட உடம்புதான் எல்லாமேன்னா அப்புறம் காதலுக்கு என்ன மரியாதை?’ என நீங்கள் சீறலாம். இதே கேள்விதான் அந்தப் பெண்ணிடமும் இருந்தது. இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவருமே ஏமாற்றுக்காரர்கள்... அதே சமயம், இருவருமே ஏமாளிகளும் கூட. ‘உன் மனசைத்தான் காதலிக்கிறேன்...’ எனக் காதலிக்கும்போது அந்தப் பையன் நிச்சயம் சொல்லியிருப்பான். மேக்கப் என்பது பெண் போடும் வேஷம் என்றால், இப்படிப்பட்ட கவிதை வார்த்தைகள்தான் ஆண் போடும் வேஷம். இந்த வேஷங்களை இருவருமே உணர்வதில்லை. அதுதான் பிரச்னை.

உண்மையில் அனைத்துக்கும் உடல்தான் பிரதானம். காதல், கல்யாணம், குடும்ப அமைப்பு இப்படி எல்லாமே கட்டி எழுப்பப்படுவது ஆண், பெண் இருவரின் உடல் மீதுதான். ‘உடம்பைத்தான் காதலித்தாயா?’ எனக் கேட்கிற அதே பெண், கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தால் என்ன செய்வாள்? ‘திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியம்’ என கோர்ட்டே சமீபத்தில் யோசனை சொன்னதை இங்கே பொருத்திப் பார்க்கலாம். 

ஆக, காதலிக்கும்போது எதிராளி போடுவது வேஷம் என்பதும் புரிய வேண்டும். தான் போடும் வேஷத்தை கொஞ்சம் அளவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஆண் பெண் இருவருக்குமான அட்வைஸ்!’’ என்கிறார் அவர்.‘ஆண்களுக்கு செக்ஸ்தான் முதல் குறிக்கோள்’ என உளவியல் சொல்கிறது. ஆனால், அந்த செக்ஸ் உணர்வைக் குறைத்துக்கொள்ளவும் ஆண்கள் விரும்புவார்களா என்ன? 

இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவருமே ஏமாற்றுக்காரர்கள்... அதே சமயம், இருவருமே ஏமாளிகளும் கூட!ஹாய் பாஸ்... கல்யாணத்துக்கு முன்னாடி என் வொய்ஃபை நீங்கதான் விரட்டி விரட்டி காதலிச்சீங்களாமே! ‘இப்பவும் அவளை மறக்க முடியலை’னு வேற சொன்னீங்களாமே! இல்லீங்... அது நான் இல்லீங்!

-தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்


http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7975&id1=4&issue=20141201





==--==

Please Contact for Appointment