Tuesday, February 5, 2019

ஓமம் - Omam மருத்துவப் பயன்கள்





ஓமம்



வளரியல்பு: செடிகள்


தாவர விளக்கம்: இந்தியாவின் மலைப்பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள தாவரம். விதைகள் ஓமம் எனப்படுகின்றன. இவையே மருத்துவத்தில் பயன்படுபவை. இவை கார்ச்சுவையுடன் கூடியதாகும், மேலும் ஒருவித சிறப்பு வாய்ந்த நறுமணமும் இதற்கு உண்டு. அசமோதம், திப்பியம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஒமத்திற்கு உள்ளது. உணவின் சுவையைக் கூட்டவும் ஓமம் பயன்படுகின்றது. நாட்டு மருந்துக் கடைகளிலும் மளிகை கடைகளிலும் ஓமம் கிடைக்கும்.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

குறிப்பு: இந்தப் பகுதியில் ஒமம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தும் ஒமச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும்.

ஓமம் கார்ப்புச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும்; வாயுவை அகற்றும்; அழுகலகற்றும்; வெப்பமுண்டாக்கும். உடலை பலமாக்கும்; உமிழ்நீரைப் பெருக்கும். ஓமத்தை உணவில் சேர்த்துக் கொண்டு வர, அஜீரணம் வயிற்று உப்புசம், அதிசாரம், சீதபேதி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஓமம் குழந்தை மருத்துவத்திலும் முக்கிய இடம் வகிக்கின்றது. முக்கியமா குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான நோய்களுக்கு மிகவும் பயன்படுகின்றது.


சளி ஒழுகுதல், மூக்கடைப்பு குணமாக

Ø  ஓமத்தை இலேசாக வறுத்து, இடித்துத் தூள் செய்து கொள்ள வேண்டும். 5 கிராம் அளவு தூளுடன் சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து, வெள்ளைத் துணியில் வைத்து, பச்சைக் கற்பூரப் பொடியுடன் கலக்குமளவிற்கு நன்றாக நசுக்கி பந்து போலத் துணியில் கட்டி மூக்கால் நுகர வேண்டும்.


வாயு உபாதை குணமாக

Ø  ஓமத்தை வறுத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/4 தேக்கரண்டி அளவு, வெந்நீரில், இரவில் உட்கொள்ள வேண்டும்.


வயிறு மந்தம் குணமாக

Ø  ஓமம், சுக்கு, கடுக்காய் தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, 1/2 தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும்.


வீக்கம் கரைய

Ø  ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி, களிம்பு போலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.


வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் தீர

Ø  ஓமம், மிளகு, வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்களுக்கு, வேளைக்கு ½ தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.


வயிற்றுவலி குணமாக

Ø  ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசைப் போலச் செய்து, வயிற்றின் மீது பற்றுப் போட வேண்டும்.


ஓமத்தீநீர் மற்றும் ஓமத் தைலம்

Ø  1 லிட்டர் நீருக்கு 150 கிராம் ஓமம் என்கிற அளவில் சேர்த்து, வாலை வடித்தல் முறையில் கொதிக்க வைத்து உருவாக்கப்படுவது ஓமத்தீநீர் ஆகும். இந்த செய்முறையின் போது, ஓமத்தீநீரின் மீது படிந்து மிதக்கும் எண்ணெய்க்கு ஓமத் தைலம் என்கிற பெயர் உண்டு. நாட்டு மருந்துக் கடைகளிலும் பிற இடங்களிலும் ஓமத்தீநீர் விற்பனைக்கு கிடைக்கும். இதை வாங்கி, 30 மி.லி. அளவு குடித்து வர, வயிற்றுப் பொருமல், செரியாமை, சீதக்கழிச்சல் ஆகியவை குணமாகும். குழந்தைகளுக்கு, ஓமத் தைலம் 1 முதல் 3 துளிகள் வரை மேற்கூறிய பிரச்சனைக்கு உள்ளுக்குக் கொடுக்கலாம்.


ஓமத்தின் வேறு வகைகள்

கடைச்சரக்குகளாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் விதைகளே மருத்துவத்தில் பயன்படுபவை. சாதாரண ஓமத்தைப் போலவே இதனையும் பயன்படுத்தலாம்.


1. குரோசாணி ஓமம் – Hyoscyamus niger: செடி வகை. இமயமலையில் வளர்கின்றது. தாவரம் மணமிக்கது, பூக்கள் இளமஞ்சள் நிறமானவை. திப்பியம், கார்சவை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. விதைகள், கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை, உறக்க முண்டாக்கும்; நடுக்கத்தைக் குறைக்கும்; சுவாசகாசத்தைக் குணமாக்கும்; நுரையீரல் அழற்சியைப் போக்கும். சூதகவாயு, சூதகவலி போன்றவற்றுக்கும் உள்ளுக்குக் கொடுக்கலாம். சிறுநீர்த்தாரையை பலப்படுத்தும். பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.


2. அசமதா ஓமம் – Trachyspermum roxburghianum விதைகளே மருத்துவத்தில் பயன்படுவை. சாதாரண ஓமத்தைவிட அதிகமான காரச்சுவை கொண்டது.  செரியாமல் மலம் கழிவது, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வறட்டு இருமல், இரைப்பிருமல் இவைகளைக் குணமாக்கும். சிறுநீரைப் பிரிக்கும்; சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்; பசியைத் தூண்டும்; கல்லீரல்,  மண்ணீரலை உறுதியாக்கும்.



Please Contact for Appointment