Friday, February 1, 2019

ஆவாரை - Aavarai மருத்துவப் பயன்கள்







ஆவாரை



வளரியல்பு: செடிகள் புதர்ச் செடி அமைப்பிலும் வளரும்.


தாவர விளக்கம்: பளிச்சிடும் தங்க மஞ்சள் நிறமான, கொத்தான பூக்களை உடைய தாவரம். மெல்லிய, தட்டையான காய்களை உடையது தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பாக வளர்கின்றது. சாலை ஒரங்களிலும், தரிசு நிலங்களிலும் இயற்கையாக ஆவாரை வளர்ந்திருக்கும். தலபோடம், ஆவீரை, மேகாரி, ஆவாரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

  ஆவாரையின் தண்டு மற்றும் வேர்ப்பட்டை, தோல் பதனிடும் செயல்முறையில் பயன்படுகின்றது.

நீண்ட தூரம் நடப்போரே கவனியுங்கள் - ஆவாரை இலையை பருத்தி துணியில் பரப்பி, அந்தத் துணியை மடித்து தலைப்பாகையாக செய்து, தலையில் அந்தத் தலைப்பாகையை வைத்து கொண்டு நடக்க வெயிலின் வெப்பம் தோன்றாது, நடையும் வேகமாகும்.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத்தாவரமும் துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீரக, சிறுநீர்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும். இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை, காமம் பெருக்கும்; குளிர்ச்சியுண்டாக்கும்.


வெள்ளைபடுதல் சிறுநீர் எரிச்சல் தீர

Ø  ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்துக் கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்னெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற

Ø  பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்து வர வேண்டும் அல்லது பூவைக்குடி நீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.


நீரிழிவு மருத்துவம்

Ø  பழங்காலத்திலிருந்தே, ஆவாரைக்கும் நீரிழிவை கட்டுப்படுத்தும் செயல் முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஆவாரையின் பரந்த உபயோகத்திலிருந்து தெளிவாகின்றது. இன்று, நீரிழிவு மருத்துவத்தில் பயன்படும் பல காப்புரிமை செய்யப்பட்ட இந்திய மருந்துகள் ஆவாரையிலிருந்து செய்யப்படுகின்றன. இரத்தத்தில் யூரியாவின் அளவைக் குறைக்கும். ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சல், கோஷ்டம், மருதமரம் ஆகியவற்றின் உலர்ந்த தண்டுப் பட்டைகளை ஒரே அளவாக சேகரித்துக் கொண்டு, நன்கு தூள் செய்து கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி அளவு தூளை, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 8ல் ஒரு பங்காகக் காய்ச்சி குடிக்க வேண்டும். காலை, மாலை இரண்டு வேளைகள் இவ்வாறு 2 வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வரலாம்.
ஆவாரம் பூக்கள் இருபதைப் பசைபோலச் செய்து, புளித்த மோரில் கலக்கிக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வரை இவ்வாறு செய்து வரலாம்.


மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப் போக்கு கட்டுப்பட

Ø  20 கிராம் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி ஆக சுண்டக்காய்ச்சி 50 மி,லி. அளவில், காலை, மாலை வேளைகளில் குடித்து வர வேண்டும்.


தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக

Ø  பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சம அளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊற வைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.


உடல் பலம் பெற ஆவாரை பஞ்சாங்க சூரணம்

Ø  ஆவாரையின் வேர், இலை, பட்டை, பூ, காய் இவற்றைச் சம எடையாகச் சேகரித்து காயவைத்து, இடித்துத் தூளாக்கி வைத்து கொண்டு, 10 கிராம் வீதம், காலை, மதியம், மாலை வேளைகளில் வெந்நீருடன் உட்கொள்ள வேண்டும். பிரமேகம், மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல் மெலிவு, பலக் குறைவு ஆகியவை தீரும். உடல் பலம் பெறும். 90 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.

Please Contact for Appointment