Friday, February 1, 2019

உத்தாமணி - Uthamani மருத்துவப் பயன்கள்








உத்தாமணி



வளரியல்பு: கொடி

தாவர விளக்கம்: 5 செ.மீ. நீளமுடைய, இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு, பசுமை நிறமான பூங்கொத்துக்களையும், மென்மையான முட்களைக் கொண்ட காய்களையும் உடைய சுற்றிப் படரும் கொடியினம். காய்கள், இரட்டையான தொகுப்புடன் வளைந்து, 7 செ.மீ. வரை நீளமாகக் காணப்படும். மேற்பகுதியில் சாம்பல் நிறமான வலிமையற்ற முட்களுடன் கூடியது. காய்களின் உள்ளிருக்கும் முட்டை வடிவமான விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சிழைகள் அடுக்கப்பட்டிருக்கும். தென்னிந்தியா முழுவதும் இயல்பாக வளர்கின்றது, தமிழகமெங்கும் ஏறுகொடிகளாக வேலிகளில் படர்கின்றது. தாவரத்தைக் கிள்ளினால் பால் வடியும். வேலிப்பருத்தி, உத்தம கன்னிகை போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்ப, காரப் பண்புகளும் கொண்டது. குடைச்சல், குத்தல், வீக்கம், நடுக்கம், வலி, இரைப்பு, இருமல், கோழை ஆகியவற்றை நீக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; வாந்தியுண்டாக்கும்; பசியைத் தூண்டும். இலைச்சாறு மூக்கடைப்பை நீக்கும்.
கருப்பைக்கான சத்து மருந்தாகவும் கபத்தையும், வாந்தியையும் வெளியே கொண்டு வரும் மருந்தாகவும் இலைகள் பயன்படும் என்பது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாவரத்தின் பிரதானமான செயல்படும் மூலப்பொருள்பெர்குலேரியா’, மகப்பேற்றின் போது ஏற்படும் அதிகமான இரத்தப் போக்கினைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகும்.


குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், செரியாமை தீர

Ø  பசுமையான 3 உத்தாமணி இலைகளைச் சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, இலேசாக நசுக்கி, 100 மி.லி தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, 25 மி.லி. அளவாகக் குடிநீராக செய்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு வசம்பைச் சுட்டு, கரியாக்கிக் கொண்டு, 2 அரிசி எடை அளவு கரியை, 25 மி.லி. உத்தாமணிக் குடிநீருடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இதனை, குழந்தைகளுக்கு, 5 மி.லி. அளவு, காலை, மாலை இரண்டு வேளைகள் கொடுக்க வேண்டும்.


குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வெளியாக

Ø  இலையின் குடிநீரை, 20 மி.லி. அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். வீக்கம் குறைய உத்தாமணி இலைச்சாற்றைச் சிறிதளவு சுண்ணாம்புடன் கலந்து கால் வீக்கங்களுக்குப் பற்றாக போடலாம்.


மூட்டுவலி கட்டுப்பட

Ø  இலைச் சாற்றுடன் சம அளவு எலுமிச்சம்பழச் சாறு கலந்து மேல்பூச்சாக வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

Ø  சூதகவாயு, கீல்வாதம், வீக்கம், ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றிற்கென தயார் செய்யப்படும் மருந்துகளில் உத்தாமணியும் முக்கிய இடம் வகிக்கின்றது.


Please Contact for Appointment